நாள்தோறும் பல்வேறு கூட்டங்கள் நடைபெறுகின்றன. அக்கூட்டங்களில் நிகழ்த்தப்படும் உரைகளில் சிறந்தவற்றை இப்பகுதியில் தொடர்ந்து பிரசுரித்து வருகிறோம். உரை நிகழ்த்தியவரோ, கேட்டவர்களோ இப்பகுதிக்கு உரைகளை அனுப்பலாம். உரையுடன் புகைப்படத்தையும் உரை இணைப்பையும் samarasam.article@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
காஸா இனப்படுகொலைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தமிழ்மாநிலக் குழு 2025 அக்டோபர் 08ஆம் நாள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை இந்த இதழின் மேடையை அலங்கரிக்கிறது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கூட்டத்தை எழுச்சியுடன் ஏற்பாடு செய்துள்ளது. எழுச்சியுடன் என்று சொல்வதை விட உணர்ச்சியுடன் இதை ஏற்பாடு செய்திருக்கின்றது. இதற்காக நான் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருக்கின்ற நான் மட்டுமல்ல மனிதநேயச் சிந்தனை கொண்ட ஒவ்வொருவரும் காஸாவில் நடந்து கொண்டிருக்கும் மனித இனப்படுகொலையைக் கண்டித்துக் கொண்டிருக்கின்றோம். ஃபலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகின்றோம்.
கடந்த ஓராண்டாகவே காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் ஏறக்குறைய 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள். 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். சுருங்கச் சொல்வதானால் இந்த ஓராண்டில் காஸாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஃபலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு ஓர் சிறிய எடுத்துக்காட்டு சொல்வதானால் கடந்த ஜூன் மாதத்தில் பட்டினியால் வாடக்கூடிய ஃபலஸ்தீனர்கள் உணவுப்பொருள் ஏற்றிவரும் வாகனத்தை எதிர்பார்த்திருந்தபோது 45 பேரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. உணவுக்காகக் காத்திருந்தவர்களின் உயிரைப் பறித்த இந்தக் கொடூரத்தைப் பார்த்தபோது எல்லாருடைய இதயமும் நொறுங்கிப் போயிருக்கிறது.
மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற கொடுமைகளை, இந்த அநீதியைக் கண்டிக்காமல் அமைதியாகக் கடந்து செல்ல யாருக்காவது மனது ஒப்புமா? சில நாள்களுக்கு முன் இன்னொரு செய்தியையும் பார்த்தேன். மரணத்தில் விளிம்பில் தவித்துக் கொண்டிருந்த ஃபலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான பால் பவுடர்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்ற 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களைத் தடுத்து கைது செய்துள்ளது இஸ்ரேல். பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா?
காஸாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கான முயற்சிகளை இந்திய ஒன்றியத்தை ஆளக்கூடிய பாஜக அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலமாக உங்கள் அனைவர் சார்பாகவும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். ஒன்றிய பாஜக அரசு இஸ்ரேல், அது தொடர்புடைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை, பிற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து காஸாவில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளைச் செய்யவும் இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மனிதாபிமானம் இருக்கின்ற அனைவரும் இதை வேறு ஒரு நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. உலக அமைதி என்பது எல்லாருக்கும் பொதுவானது. மனித உரிமை எல்லாருக்கும் பொதுவானது. அதைக் காத்தாக வேண்டும். மானுட உயிர்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு இல்லாதது. இதைக் காக்கின்ற கடமை நம் அனைவருக்கும் இருக்கின்றது.இந்த மோசமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் உடனடியாக, முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
ஃபலஸ்தீனர்களுடைய மறுவாழ்வுத் திட்டம் காஸாவை மறுகட்டமைப்புச் செய்வது, மனிதாபிமான உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்துத் தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்துப் பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். உலக நாடுகள் முன்வைக்கக்கூடிய நிபந்தனைகள், உறுதிமொழிகள் ஃபலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
இந்த நேரத்தில் உங்களுடன் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். வருகின்ற அக்டோபர் 14ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்தும் உடனடியாகப் போரை நிறுத்த வலியுறுத்தியும் அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.
இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுøமயாக நம்புகிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்கள் உயிரிழப்பது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற என்னுடைய விருப்பத்தைக் கோரிக்கையாக முன்வைத்து என் உரையை நிறைவு செய்கின்றேன்.