வந்தே மாதரம் பாட வேண்டும் என்று அனைவரையும் கட்டாயப்படுத்துவதற்காக மக்களவையில் விவாதம் நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது இம்மியளவும் அவசியமற்ற, பயனற்ற, உப்புச் சப்பற்ற பிரச்னை.
ஒருபக்கம் பணவீக்கம் நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் மிகப் பெரும் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் சாலைகள், பாலங்கள், விமானத் தளங்கள், விமானப் போக்குவரத்து என உள்கட்டமைப்பு மிகப் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி நிற்கின்றது. இவையெல்லாமே விவாதிக்கப்பட வேண்டிய இன்றியமையாத, முக்கியமான பிரச்னைகளாக இருக்கின்றன.
தேசப் பற்று இதயத்துக்குள் இருந்து தோன்ற வேண்டியதாகும். ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடு, பாடு என்று கட்டாயப்படுத்துவதால் தேசப் பற்று வந்துவிடப் போவதில்லை. தேசப் பற்று திணிக்கப்பட முடியாது. அது உள்ளுக்குள்ளிருந்து கிளம்புகின்ற உணர்வாகும். தேசப்பற்று என்கிற பெய ரில் ஒற்றைப் பாடலை ஒட்டுமொத்த தேசத் தின் மீதும் திணிப்பது தவறாகும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் நாடு மீதான அன்பை தன்னுடைய பாணியில் வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு. உண்மையான, அடிப்படையான பிரச்னைகளை விவாதிப்போம். மக்களவையின் பொன்னான நேரத்தை இது போன்ற உப்புச் சப்பற்ற பிரச்னைகளை விவாதிப்பதில் வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.